Saturday, September 18, 2010

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? – ஜெர்மன் விஞ்ஞானி!- Video

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.

தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.

ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்ற வில்லையென்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,

தன்னடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்தவர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,

யூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.

பைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.

பின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக் குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார். ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், “நிச்சயமாக முஹம்மது ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும்! ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படித்து வந்திருக்கிறார்.

குர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.
ஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.

மேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள்? உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா? என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன்!. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை! கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் “நான் ஒரு சிறுவன் என்பதை!. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா? என்று! ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்.

மேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள்! ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே!’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்

மேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம்! எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், “ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118). எனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை! ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள்! அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள்! ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது! இதில் எவ்வித தவறும் இல்லை! தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை! இந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்!

இவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.


 நன்றி:www.suvanathendral.com/

0 comments:

Post a Comment