Saturday, September 18, 2010

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – முன்னாள் பெந்தகொஸ்தே மினிஸ்டர் கென்னத் L.ஜெர்கின்ஸ்!


 முன்னுரை: -
ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது என் மீது கடமையாக இருக்கிறது. நான் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு சத்திய இஸ்லாத்தின் ஒளியை அனுபவிப்பதற்கு பாக்கியம் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டிய அத்தியாவசிய தேவையிருப்பதை உணர்ந்தேன்.

முஹம்மது (ஸல்) அவர்களும் மற்றும் நேர்வழி பெற்ற அவருடைய வழிவந்தவர்களான சத்திய சஹாபாக்கள் போதித்தவாறும் அழகிய மார்க்கமான இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கும் என் மீது கருனை புரிந்த வல்ல இறைவனுக்கு நான் நன்றி கூற மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நாம் உண்மையான நேர்வழியை அடைவதும், இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் அந்த நேர்வழியைப் பின்பற்றுவதற்குரிய ஆற்றலை அடைவதும் இறைவனின் கருனையினாலேயன்றி வேறில்லை.

நான் இஸ்லாத்தை தழுவும் போது அஷ்செய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்கள் என் மீது அன்புகாட்டியதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஒவ்வொரு தடவையும் அவரை சந்திக்கும் போது நான் அவரிடமிருந்து கற்ற கல்வியை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் ஆசைப்படுகிறேன். இவர் தவிர இன்னும் அநேகர் எனக்கு ஆர்வமுட்டி மார்க்க அறிவைப் பெறுவதில் உதவினார்கள். அவர்களின் பெயர்களில் யாரையேனும் நான் விட்டுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்களின் பெயரை நான் பட்டியலிடவில்லை. எனவே நான் ஒரு உண்மையான முஸ்லிமாக மாறுவதற்காக ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் எனக்கு எல்லாவகையிலும் உதவி செய்ய வைத்த அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்தினால் போதும் என எண்ணுகிறேன்.

இந்த சிறிய முயற்சி அனைவருக்கும் பயனளிக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். கிறிஸ்தவ உலகில் பெருவாரியாகக் காணப்படும் மனம் போன போக்கில் வாழும் வாழ்க்கைக்கு ஒருவிடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் பெறுவார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவர்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிறிஸ்தவர்களிடம் கிடையாது. ஏனென்றால் அந்தப் பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக விளங்குவதே அவர்கள் தான். மாறாக, கிறிஸ்தவ உலகை செல்லரித்துக் கொண்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கும் மற்றும் உலகில் காணப்படும் மற்ற எல்லா மார்க்கங்களிலும் உள்ள பிரச்சனைகளுக்குமான ஒரே தீர்வு இஸ்லாம் தான். இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டி நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எற்ற சிறந்த நற்கூலியை வழங்குவானாகவும்.

அப்துல்லாஹ் முஹம்மது அல்-ஃபாரூக்கீ அத்தாயிஃப், சவுதி அரேபியா.

அறிமுகம்!

சிறு வயது முதலே கடவுள் பக்தி உள்ளவனாக வளர்கப்பட்டேன். என்னுடைய பாதி வாழ்க்கையை தீவிர பெந்தகோஸ்தே கிறிஸ்தவதத்தைப் பின்பற்றுகின்ற என் பாட்டியிடம் நான் வளர்ந்ததால் சிறுவயது முதலே கிறிஸ்தவ தேவாலயம் எனது வாழ்க்கையின் முக்கிய அம்சமாகி விட்டது. நான் ஆறு வயதை அடைந்தபோது, “ஒரு நல்ல சிறுவனாக இருப்பதற்காக பரலோகத்தில் எனக்காக நல்ல வெகுமதிகள் காத்திருக்கின்றது; அடம்பிடிக்கும் மற்ற சிறுவர்களுக்காக தண்டனைகள் காத்திருக்கிறது” எனவும் நம்பினேன். “பொய்யர்கள் அனைவரும் இழிவுபடுத்தப்பட்டு நரகத்திற்கு செல்வார்கள்; அங்கே அவர்கள் நிரந்தரமாக உரிக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார்கள்” என்றும் எனது பாட்டி எனக்கு போதித்து வந்தார்கள்.

என்னுடைய தாயார் இரண்டு முழு நேரப் பணிகள் செய்து வந்தார். மேலும் அவர் தன்னுடைய தாயார் (எனது பாட்டி) எனக்கு போதித்தவற்றையும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். என்னுடைய பாட்டியின் பரலோகத்தைப் பற்றிய எச்சரிக்கைகளைப் பற்றி நான் சிரத்தை எடுத்துக் கொண்டது போல என்னுடைய இளைய சகோதரரும் மூத்த சகோதரியும் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சிறு வயதில் முழு நிலவை செந்நிறத்தில் காணும் போது நான் அழ ஆரம்பித்து விடுவேன். காரணம் என்னவெனில் உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்று தான் நிலவு இரத்தத்தைப் போன்று சிவப்பு நிறமாகிவிடுவது என்று போதிக்கப்பட்டிருந்தேன்.

எனக்கு எட்டு வயதாகும் போது இவ்வுலகிலும் ஆகாயத்திலும் காணப்படும் உலக அழிவு நாளுக்கான அடையாளங்களாக நான் நினைத்தவற்றின் காரணமாக எனக்குள் பயம் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக நியாயத் தீர்ப்பு நாள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு கணவுகள் தோன்றியது. என்னுடைய வீடு இரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது. அந்த தண்டவாளத்தின் வழியே அடிக்கடி இரயில் சென்று கொண்டிருந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, இரயில் எஞ்சினின் ஊதல் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு விழித்து, ‘நான் இறந்து விட்டேன்; இப்போது சூர் ஊதல் மூலமாக மீண்டும் உயிர்பிக்கப்படுகின்றோம்’ என்று எண்ணிக் கொள்வேன். சிறுவர் சிறுமியர்களுக்கான பைபிளின் கதைகள் மற்றும் வாய்மொழி போதனைகளின் காரணமாக இத்தகைய எண்ணங்கள் என் பிஞ்சு மனதிலே ஆழமாக பதிந்திருந்தன.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நல்ல உடைகளை உடுத்திக் கொண்டு தேவாலயங்களுக்குச் செல்வோம். என்னுடைய தாத்தா தான் எங்களை எல்லாம் அழைத்துச் செல்வார். நாங்கள் காலை பதினோரு மணிக்கு தேவாலயத்திற்குச் சென்றால் மதியம் மூன்று மணி வரை அங்கேயே இருப்போம். பல நேரங்களில் என் பாட்டியின் காலில் படுத்து உறங்கிய நினைவிருக்கிறது. சில நேரங்களில் நானும் என்னுடைய சகோதரரும் ஞாயிறு வகுப்பு மற்றும் காலை நேர பிரார்த்தனைக்கு இடைப்பட்ட வேளையில் தேவாலயத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதுண்டு. அப்பொழுது எங்கள் தாத்தாவுடன் இரயிலடியில் அமர்ந்துக் கொண்டு போகின்ற வருகின்ற இரயில்களை வேடிக்கைப் பார்ப்பதுண்டு. என் தாத்தா தேவாலயத்திற்குச் செல்வதில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு என் தாத்தா வாத நோயால் பாதிக்கப்பட்டு பகுதியாக செயலிழந்தார். அதன் காரணமாக நாங்கள் தொடர்ந்தார் போல் தேவாலயத்திற்கு செல்ல இயலாமல் போனது. இந்தக் காலக் கட்டம் என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமானதாக இருந்தது.

தேவாலயத்திற்கு செல்ல இயலாததால் நிம்மதியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது நானாகவே செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்தேன். எனக்கு பதினாறு வயதாக இருக்கும் போது என்னுடைய நன்பரின் தந்தை பாதிரியாராக இருக்கும் தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். அது மிகச் சிறிய கட்டிடமாக இருந்தது. அதில் என்னுடைய நன்பரின் குடும்பத்தினர், நான் மற்றும் என்னுடைய மற்றொரு பள்ளி நன்பன் ஆகியோர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தோம். இது அந்த தேவாலயம் மூடப்படும் வரை பல மாதங்கள் நீடித்தது. பிறகு நான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது நான் என்னுடைய மார்க்கத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மீண்டும் உணர ஆரம்பித்தேன். ஆகவே பெந்தகோஸ்தே போதனைகளின் பால் நான் என்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டேன். எனக்கு “ஞானஸ்நானம்” செய்விக்கப்பட்டு “பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டதாக” கூறப்பட்டேன். ஒரு கல்லூரி மானவன் என்ற முறையில் தேவாலயத்தைக் கொண்டு பெருமிதம் அடைந்தேன். ஒவ்வொருவரிடமும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே நான் “பாவமீட்சிக்கான பாதையில்” இருப்பதாக உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் தேவாலயத்திற்குச் செல்லும் போதெல்லாம் அதன் கதவுகள் எனக்காகத் திறக்கப்பட்டது. நான் நாள் கணக்காக, வாரக்கணக்காக பைபிளை இடைவிடாது படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கிறிஸ்தவ அறிஞர்களின் பேச்சுக்களைக் கேட்டு என்னுடைய 20 வயதில் மினிஸ்ட்ரியோடு என்னை இணைத்துக் கொண்டேன். அதன் பிறகு நான் மார்க்க பிரசங்கம் செய்ய ஆரம்பித்து அதன் மூலம் மக்களிடைய நன்றாக அறிமுகம் ஆனேன். நான் இருக்கும் தேவாலயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிர மற்ற எவரும் பாவமீட்சி அடையமுடியாது என்று நான் உறுதியாக நம்பினேன். நான் கடவுளை எப்படி நம்பினேனோ அவ்வாறு கடவுளை நம்பாதவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்தேன்.

மேலும் ‘இயேசு நாதரும் இறைவனும் ஒன்று தான்’ என்று நினைத்திருந்தேன். நம்முடைய தேவாலயம் திரித்துவத்தில் நம்பிக்கையில்லாதது என்றும், ஆனால் இயேசு நாதரே (அலை) பிதாவும், மகனும் பரிசுத்த ஆவியுமாவார் என்றும் நான் பயிற்றுவிக்கப்பட்டேன். நான் எனக்குள் அவற்றைப் புரிந்துக் கொள்வதற்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் உண்மையைக் கூற வேண்டும், என்னால் அதை முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலவில்லை. என்னைப் பொறுத்தவரை அதன் சித்தாந்தம் எனக்கு அறிவுப்பூர்வமாகப்பட்டது. பெண்களின் புனித ஆடைகளுக்கும் ஆண்களின் இறை பக்திக்கும் நான் மரியாதை அளித்தேன். தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு, முகங்களில் மேக்அப் சாதனங்களை போடாமல், தங்களை இயேசு கிறிஸ்துவின் தூதர்களாக கருதுகின்ற பெண்களையுடைய கிறிஸ்த சித்தாந்தத்தை நான் போதிக்கிறேன் என்று எனக்குள் மகிழ்ந்து பெருமிதம் அடைந்தேன். பரலோக வெற்றிக்கான உண்மையான வழியை நான் கண்டு கொண்டாதாக சிறிது கூட சந்தேக நிழலில்லாமல் என்னில் நானே திருப்தியடைந்துக் கொண்டேன். மற்ற தேவாலயங்களில் இருப்பவர்களுடனும் மற்ற கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுடனும் எனக்கிருக்கும் பைபிளின் அறிவைக் கொண்டு விவாதம் செய்து அவர்களை மௌனமாக்குவேன். நூற்றுக் கணக்கான பைபிளின் வசனங்களை மனனம் செய்திருந்தேன். இதுவே என்னுடைய மத போதனைகளுக்கு ஒரு முக்கிய விளம்பரமாக இருந்தது. ஆயினும், நான் சரியான பாதையில் இருப்பதாக எனக்குள் உணர்ந்தாலும் என்னுடைய மற்றொரு பகுதி உண்மையைத் தேடிக் கொண்டிருந்தது. இதைத் தவிர உயர்வான உண்மை வேறெங்காவது இருக்க வேண்டும் என நான் உணர்ந்தேன்.

நான் தனிமையில் இருக்கும் போது தியானத்தில் ஈடுபட்டு, ‘நான் தவறான செயல்களைச் செய்து கொண்டிருந்தால் என்னை மன்னித்து எனக்கு சரியான பாதையைக் காட்டுமாறு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருப்பேன். அந்த சமயங்களில் நான் ஒரு முஸ்லிமைக் கூட சந்தித்ததில்லை. நான் அறிந்தவரையில், எலிஜா முஹம்மது என்பவரைப் பின்பற்றுபவர்கள் தான் “நாங்கள் இஸ்லாமியர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் “கறுப்பு முஸ்லிம்கள்” என்றும் அழைக்கப்படுவதுண்டு. எழுபதுகளின் பிற்பகுதியில் அமைச்சர் லூயிஸ் ஃபராக்கான் ‘நேசன் ஆஃப் இஸ்லாம்’ என்ற அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து புதுப்பித்துக் கொண்டிருக்கின்ற வேளை அது! ஒருமுறை நான் என்னுடைய சக ஊழியரின் அழைப்பின் பேரில் அமைச்சர் ஃபராக்கானின் பேச்சைக் கேட்பதற்காக சென்றேன். அந்தப் பேச்சு என் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவல்ல ஒரு அனுபவமாக உணர்ந்தேன். இதற்கு முன்பு வேறு எந்த கறுப்பு இன மனிதரும் இவர் பேசியது போன்று பேசி நான் கேட்டதில்லை. உடனே அவருடனான ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவரை என்னுடைய மத நம்பிக்கைக்கு மாற்றலாம் என விரும்பினேன். வழிதவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பைபிளை போதித்து மதமாற்றம் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன்.


கல்லூரி படிப்பை முடித்த பிறகு நான் முழு நேரப் பணியில் ஈடுபட்டேன். நான் மினிஸ்ட்ரிக்கு தகுதியான பொழுது எலிஜா முஹம்மதுவை பின்பற்றுபவர்களின் தொடர்பு எனக்கு அதிகமானது. கறுப்பு இனத்தவர்களின் தீமைகளைக் களைவதற்குப் பாடுபடும் அவர்களுடைய முயற்சியை நான் பாராட்டினேன். அவர்களுடைய ஆக்கங்களை நான் வாங்குவது அவர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். அவர்கள் எதைத் தான் நம்புகிறார்கள் என்று அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் கல்வி கற்கும் இடங்களுக்கே சென்று பயில ஆரம்பித்தேன். அவர்களுடைய சில கொள்கைகளை நிலை நிறுத்துவதற்காக பைபிளின் ஆதாரங்களை பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பைபிளைப் பற்றி நன்றாக அறிந்திருந்ததால் அவர்கள் பைபிளை தவறாக புரிந்து அதற்கு வேறு அர்த்தம் கொடுக்கிறார்கள் என்பது என்னை வருத்தத்திற்குள்ளாக்கியது. மேலும் நான் அங்கேயுள்ள பைபிளின் போதனை வகுப்புகளுக்குச் சென்று பைபிளின் பாடம் பயின்று பைபிளின் பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றேன்.

அதற்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து நான் டெக்ஸாஸ் என்ற பகுதிக்குச் சென்று அங்கேயுள்ள இரண்டு தேவாலயங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலாவது தேவாலயத்தின் மிக இளமையான தலைவர் பைபிளின் கல்வியறிவிலும் அனுபத்திலும் குறைவானவராக இருந்தார். இந்த நேரத்தில் என்னுடைய பைபிளின் அறிவு சராசரியை விட அதிகமாக இருந்தது. பைபிளைப் போதிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. நான் வேதாகமங்களை மிக ஆழமாக உற்று நோக்கினேன். அதன் காரணமாக தற்போதைய தேவாலயத்தின் தற்போதைய தலைவரை விட நான் அதிகமாக அறிந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் மரியாதையின் நிமித்தமாக நான் அந்த தேவாலயத்திலிருந்து விடுபட்டு மற்றொரு நகரத்திலுள்ள தேவாலயத்தில் சேர்ந்தேன். அங்கு இன்னும் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எனக்குத் தோன்றியது. அந்த தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் நன்கு கற்றறிந்த அறிஞராக இருந்தார். அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவருடைய சில எண்ணங்கள், செயல்பாடுகள் தேவாலயத்தின் விதிமுறைகளுக்கு மாற்றமானதாக இருந்தது. அவர் சற்று சுதந்திரமான கருத்துக்களையுடையவராக இருந்தார். இருப்பினும் அவருடைய போதனைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான பாடம் ஒன்றைக் கற்கும் வாய்ப்புக் கிட்டியது. அதாவது ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்ற பாடமாகும். வெளிப்பார்வைக்கு வேறு விதமாகத் தோன்றினாலும் நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தேவாலயத்தினுள் நிறைய தீமைகள் நடந்தது. தேவாலயத்தினுள் நடைபெற்றுக் கொண்டிருந்த இத்தகைய தீமைகள் என்னுள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் மிகத் தீவிரமாக போதித்து வந்த கொள்கைகளைப் பற்றி எனக்குள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

கிறிஸ்த மினிஸ்ட்டிரியின் உயர் மட்டத்தல் மிகுந்த போட்டியும் பொறாமையும் நிலவுவதை நான் குறுகிய காலத்தில் உணர்ந்தேன். எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்த பழக்க வழக்கங்களில் இருந்து நிறைய மாற்றங்கள் தென்பட்டது. நான் அநாகரிகமானது என்று கருதியிருந்த ஆடைகளை பெண்கள் அணிந்தார்கள். அநேக மக்கள் எதிர்பாலரைக் கவரக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்தார்கள். மேலும் பேராசையும் பணமும் தேவலாயத்தின் நிர்வாகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் கண்டு கொண்டேன். சிறிய அளவிலான தேவாலயங்கள் மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எங்களிடம் போதனைக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் அந்த தேவாலயங்களுக்கு வருமானம் தேடித்தருமாறு வேண்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சிறிய தேவாலயங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவானதாக இருப்பின் என்னுடைய நேரத்தை அவர்களுக்கு போதனை செய்வதில் வீணாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன். ஏனென்றால், அந்த தேவாலயங்களின் மூலம் எனக்கு அதிகமாக வருமானம் கிடைக்காது என்பதாகும். அப்போது நான் அவர்களிடம், நான் பொருளாதாரத்தைப் பெருக்குவதின் பின்னால் இல்லை என்றும் அந்த சிறிய தேவாலயங்கள் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டதாக இருப்பினும் அங்கே சென்று போதனை செய்வேன் என்றும் மேலும் அதை நான் இலவசமாகவும் செய்வேன் என்றும் கூறினேன். இது அங்கே மிகுந்த சஞ்சலப்பை ஏற்படுத்தியது. யாரை நான் சிறந்த அறிஞர் என்று கருதியிருந்தேனோ அவர்களிடமே “அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதற்காக” கேள்விகள் கேட்கத் துவங்கினேன்.

பைபிளைப் பற்றிய உண்மைகளைப் பற்றி போதிப்பதை விட பணம், பதவி, அதிகாரம் இவற்றுக்குத் தான் மிக முக்கியத்துவம் அங்கு இருப்பதை அறிந்துக் கொண்டேன். பைபிளைப் படிப்பவன் என்ற முறையில் அதில் நிறைய தவறுகளும், முரண்பாடுகளும், பொய்யான கற்பனை ஊடுருவல்களும் இருப்பதை நான் அறிவேன். பைபிளைப் பற்றிய உண்மையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால் பைபிளின் உண்மைகளை மக்களின் வெளிச்சத்திற்கு எடுத்துச் செல்வதை சாத்தானின் செயலாகக் கருதினர். ஆனால், நான் பைபிளின் போதனை வகுப்புகளின் போது வெளிப்படையாகவே போதகர்களிடம் கேள்விகள் கேட்கத் துவங்கினேன். ஆனால் ஒருவரால் கூட பதில் அளிக்க இயலவில்லை.’இயேசு நாதர் என்பர் எப்படி கடவுளாகவும் அதே நேரத்தில் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் உள்ளடக்கிய ஒருவராகவும் இருக்கிறார்? ஆனால் எப்படி அவர் திரித்துவக் கொள்கைக்கு மாற்றமாகவும் இருக்கிறார்?’ என்ற என்னுடைய கேள்விக்கு ஒருவர் கூட பதில் அளிக்க முடியவில்லை. பல மதபோதகர்கள் “இவை பற்றி எங்களுக்குப் புரியவில்லை! ஆனால் நாங்கள் இவைகளை நம்புகிறோம்! அவ்வளவுதான்” என்று கூறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை!

திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பதும், விபச்சாரமும் தண்டணைகளுக்குரிய குற்றமாக கருதப்படவில்லை! சில மத போதகர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டதோடல்லாமல் தங்களின்
குடும்பங்களையும் சீரழித்தார்கள். சில தேவாலயங்களின் தலைவர்கள் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். மேலும் சில பேராயர்கள் மற்ற தேவலாயத்தின் உறுப்பினர்களுடைய மகள்களுடன் விபச்சாரம் செய்த குற்றமுடையவர்களாக இருந்தார்கள். இவைகள் அனைத்தும் மற்றும் நான் நியாயமான கேள்விகள் என்று கருதி கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காதமையும் என்னை வேறு ஒரு மாற்றத்தை தேட வைத்தது. நான் சவூதி அரேபியாவில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்ட போது அந்த மாற்றம் வந்தது
.

புதிய ஆரம்பம்!

நான் சவூதி அரேபியா வந்தவுடனே முஸ்லிம்களின் ஒரு வித்தியாசமான புதிய வாழ்க்கை முறையை பார்த்தேன். சவூதி ஆரெபியாவில் உள்ளவர்கள், நான் பார்த்திருந்த எலிஜா முஹம்மது மற்றும் லூயிஸ் ஃபராக்கான் ஆகியோர்களைப் பின்பற்றுபவர்களை விட வித்தியாசமானவர்களாக இருந்ததார்கள். இங்கு, அனைத்து நாடுகள், நிறங்கள் மற்றும் மொழிகளையுடையவர்களும் இருந்தார்கள். உடனே இந்த வித்தியாசமான புதிய மதத்தைப் பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் தோன்றியது. தீர்க்கதரிசி முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அதனால் நான் மேலும் அறிந்து கொள்ள ஆர்வமானேன். இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் சகோதரரிடமிருந்து நான் சில புத்தகங்களைக் கேட்டேன். அவர் எனக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களையும் கொண்டு வந்துக் கொடுத்தார். அவைகள் ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாகப் படித்தேன். அதன் பிறகு எனக்கு புனித குர்ஆன் கொடுக்கப்பட்டது. அதை நான் நான்கு மாதங்களுக்குள் பலமுறை படித்துவிட்டேன். நான் கேள்வி மேல் கேள்விகளாக அவர்களிடம் கேட்டேன். நான் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எனக்கு திருப்தியளிக்கின்ற வகையில் பதில்களும் கிடைத்தது.

அந்த முஸ்லிம் சகோதரர்கள் என்னை சமாதான படுத்துவதற்காக தங்களுக்குத் தெரிந்த அறிவை வைத்து முயற்சிக்காதது என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சகோதரருக்கு நான் கேட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை என்றால் அவர்கள் ‘எனக்கு அதற்கான விடை தெரியவில்லை என்றும் தெரிந்தவரிடம் கேட்க வேண்டும்’ என்று கூறிவிடுவார். மறுநாள், நான் கேட்ட கேள்விக்கான விடையோடு அவர் வருவார். மத்திய கிழக்கில் வாழும் இந்த அற்புதமான மனிதர்களின் பணிவை நான் உணர்ந்து வியந்தேன்.

பெண்கள் முகம் முதல் கால் வரை முழுவதுமாக மறைத்திருப்பது கண்டு மிகவும் வியந்துப் போனேன். மத தலைவர் என்று குறிப்பிட்ட எவரும் காணப்படவில்லை. மத தலைமைப் பதவியை அடைவதற்காக எவரும் போட்டி போடுவதில்லை!

இவைகள் அனைத்தும் மிக அற்புதமானவைகளாக எனக்குத் தென்பட்டது. ஆனால் நான் சிறு வயது முதல் பின்பற்றி வந்த போதனைகளை கைவிடுவது பற்றிய சிந்தனைகளை நான் எப்படி என்னுள் அனுமதிக்க முடியும்? பைபிளின் போதனைகளை கைவிடுவதா? பைபிள் எண்ணற்ற முறைகள் மாற்றத்திற்கு உள்ளாகி புதுப்பிக்கப்பட்டிருப்பினும் அதில் சில உண்மைகள் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அப்போது எனக்கு அஷ்ஷெயக் அஹமது தீதாத் மற்றும் ரெவரென்ட் ஜிம்மி ஸ்வா(g)க்கத் ஆகியோர்களுக்கிடையே நடைபெற்ற ஒரு விவாத வீடியோ கேசட் ஒன்று வழங்கப்பட்டது. அந்த விவாதத்தைப் பார்த்த உடஃனேயே நான் முஸ்லிமாகி விட்டேன்.

நான் முறையாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு செய்வதற்காக ஷெய்க் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் பாஸ் அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கே நான் இனிவரும் காலங்களில் கடந்து செல்ல வேண்டிய பாதைகளைப் பற்றியும் அதற்காக நான் என்னை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டேன். நிச்சயமாக இது இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்த ஒரு பிறப்பாகும்.அப்போது நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து என்னுடைய தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்துக் கொண்டால் அவர்கள் என்ன பற்றி நினைப்பார்கள் என்று சிந்திக்கலானேன். அதற்கு நீண்ட காலம் படிக்கவில்லை. விடுமுறையில் அமெரிக்காவுக்குத் திரும்பியவுடன், ‘நான் நம்பிக்கையில் குறைவனானவன்’ என்று மகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். துரோகி, முட்டாள் போன்ற பல பெயர்கள் எனக்குச் சூட்டப்பட்டது. தேவாலயங்களின் தலைவர்கள் என்று கூறப்படக் கூடியவர்கள் மக்களிடம் ‘அவர்களின் பிரார்த்தனைகளின் போது என்னை நினைவு கூறவேண்டாம்’ என்று கூறினார்கள். ஆனால் விந்தையானது என்னவென்றால் நான் அவைகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் என்னைத் தேர்ந்தெடுத்து நேர்வழி காட்டியதற்காக நான் மிகுந்த சந்தோசமாக இருந்தேன். அதனால் அவர்களின் இந்த செயல்கள் எனக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

முன்பு நான் கிறிஸ்தவனாக இருந்தபோது எந்த அளவிற்கு ஒரு பற்றுள்ள கிறிஸ்தவனாக இருந்தேனோ அதே மாதிரி இப்போது ஒரு மிகப் பற்றுள்ள முஸ்லிமாக இருக்க விரும்பினேன். நிச்சயமாக இதற்கு நிறைய படிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் அறிவை வளர்த்துக் கொண்டே போகலாம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். இஸ்லாத்தில் கல்வி கற்பது என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமானது அன்று! யார் வேண்டுமானாலும் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு கல்வியை கற்பதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது. என்னுடைய குர்ஆன் போதகர் ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீது கிரந்தம்) தொகுப்பு ஒன்றை எனக்கு பரிசாக வழங்கினார். அப்போது தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள், அவர்களின் சொல், செயல்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். நான் ஆங்கிலத்தில் இருக்கும் பெருவாரியான ஹதீது நூல்களை வாங்கிப் படித்தேன். இவற்றைப் படிக்கும் போது என்னுடைய பைபிள் ஞானம் கிறிஸ்தவ பின்னணியில் உள்ள நிகழ்வுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு எனக்கு பேருதவியாக இருந்தது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு எனக்கு என்னுடைய வாழ்க்கையே ஒரு முற்றிலும் புதிய வாழ்க்கையாக மாறியது. குறிப்பிடத்தக்க ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், மறுவுலக வாழ்க்கைக்கு தேவையானவற்றை தயார் செய்வதிலேயே தான் நாம் இந்த உலக வாழ்க்கையை செலவிட வேண்டும் என்பதை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறலாம்.

மேலும் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் நம்முடைய நல்ல எண்ணங்களுக்குக் கூட நற்கூலி வழங்கப்படுவோம் என்பதை அறியும் போது புதிய அனுபவமாக இருந்தது. நீங்கள் ஒரு நற்காரியத்தைச் செய்ய விரும்பினாலேயே அதற்கும் நற்கூலி கிடைக்கும். இது தேவாலயங்களின் போதனைகளுக்கு சற்று வித்தியாசமானது. அதாவது ‘நல்ல எண்ணங்கள் நரகத்திற்கான பாதையை வழிவகுக்கிறது’ என்பதாகும். வெற்றி பெறுவதற்கு வழியே இல்லை. நீங்கள் விபச்சாரம் போன்ற பெரிய தவறிழைத்திருந்தால் பாதியாருக்கு முன்னிலையில் பாவ மன்னிப்பு கோரவேண்டும். உங்கள் செயல்களைப் போறுத்தே நீங்கள் நீதி வழங்கப்படுவீர்கள்.

தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள்!

அல்-மதீனா பத்திரிக்கையின் நேர் முக காணலுக்குப் பிறகு என்னுடைய தற்போதைய மற்றும் எதிர்கால் செயல்கள் குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. என்னுடைய தற்போதைய குறிக்கோள் என்னவெனில் அரபியைக் கற்றுணர்ந்து இஸ்லாத்தைப் பற்றி மென்மேலும் படித்து இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் தற்போது நான் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கிறிஸ்தவ பின்னணியில் இருந்து வருவபவர்களிடம் உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்படுகின்றேன். இறைவன் எனக்கு ஆயுளை நீட்டித்தால் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு நூல்களை எழுத வேண்டும் என விரும்புகிறேன். உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். பைபிளை நீண்ட நாட்களாக போதித்து வந்த ஆசான் என்ற முறையில் பல மில்லியன் மக்களால் நம்பப்படுகின்ற பைபிளில் காணப்படும் தவறுகளையும், முரண்பாடுகளையும் கற்பனையில் புனையப்பட்டு அதில் புகுத்தப்பட்டவைகளையும் எடுத்துக் கூறி அவர்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டுமென்பது என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்கிறேன்.

சந்தோசமான விசயம் என்னவென்றால் கிறிஸ்தவர்களிடையே நான் மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஏனென்றால் நான், அவர்கள் பயன்படுத்துகின்ற வாக்குவாத் திறமையை போதித்த ஆசானாவேன். மேலும் நான் எப்படி பைபிளைக் கொண்டு திறமையாக வாதிட்டு கிறிஸ்தவத்தைப் பாதுகாப்பது என்று கற்றறிந்திருந்தேன். மேலும் அதே நேரத்தல் மினிஸ்டர்களாகிய எங்களுக்கு தேவலாயத்தின் தலைவர்களால் வெளிப்படையாக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ தடைவிதிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வாதத்திற்கும் உரிய எதிர்வாதங்களைப் பற்றியும் நான் அறிந்து வைத்திருந்தேன்.

இறைவன் நம் அனைவருடைய அறியாமையை மன்னித்து சுவர்கத்திற்கு இட்டுச் செல்கின்ற நேரான வழியைக் காட்டுமாறு நான் பிரார்த்திக்கின்றேன். அனைத்துப் புகழும் இறைவனுக்கே உரித்தானது. இறைவன் அவனது இறுதித் துதர் முஹம்மது (ஸல்) அவர்கள், அவருடைய குடும்பத்தார்கள், அவரைப் பின்பற்றிய தோழர்கள் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களுக்கு அருள் புரிவானாகவும்.

நன்றி: www.suvanathendral.com 

0 comments:

Post a Comment